சனி, 18 செப்டம்பர், 2010

உவமைக்கவி

தனக்கென்ற பாணியை வைத்தாலும்
தாசனின் தாசனாகவே வாழ்ந்தாய் .

உன் உவமைகள் உவமேயத்தை _ மட்டும்
சிறப்பிக்கவில்லை .,
தமிழையும் சிறப்பித்தது .

உவமேயத்தை சிறப்பிக்கும்
உவமையல்ல _ நீ
உவமையை சிறப்பிக்கும்
உவமையே ! _ நீ

உன் இழப்பையும் , இடத்தையும்
நீயின்றி நிரப்புவாரில்லை .,

ஆறுதலுக்கு உவமையென்ன கண்டாய்
அவ்வுவமை ஆற்றுமா ? எம்மனதை .,

உவமை பெற்றெடுத்த ...
உவமையே !

அறிவியல் ஆயுளை நீட்டிக்கவில்லையே !
இருந்திருந்தால் ?
அருகுபோல் இருப்பாயே !

உன் இழப்பு
யாப்பிற்கோ ! பேரிழப்பு .,

பாரதிதாசா ! உன் புகழை செப்பணிட்ட
சிற்பியை இழந்தோம் .,

தமிழே ! _ நீ
யாப்பின் உளியை இழந்தாய் .,

விழுதுகள் பற்றாத நிலையில்
வேரறுந்ததே !
விருட்சகமென்னவாகுமோ ?

அடிக்கரும்பைப்போல் தமிழில் _ உன்காலம்
இனித்துக்கொண்டே ! இருக்கும் .,

உன் உவமை ...
தமிழின் பெருமை .

தங்க நகர்

இருப்புகளற்ற பூமியில்
இருந்தது நம்பிக்கை .,

துடுப்புகளற்ற போதும்
தொலைநோக்கு வெற்றி .,

உயர்ந்த உழைப்பால் கிடைத்த
ஒப்பற்ற தங்கம் .

திங்கள், 13 செப்டம்பர், 2010

ஆகசுட்டு _ 15

இளைய சமுதாயமே !
அறிவாய் அறியாமையை

சுதந்திர நாள் ?
கொடியேற்றி இனிப்பு தந்து அரசுவிடுமுறை . ,
மறந்திட முடியுமா ?

என்றோ ! ஒருநாள் ...
அடிமையாய் இருந்தோம் என்பதை
அறிவுருத்தும் நாளல்லவா ?

காயங்கள் ஆறினும்
வடுக்கள் மிச்சமிருக்கிறதே ! மீண்டும் ஏன் ?
பகைமையிடம் தோழமை .

அன்று ... சந்தைக்கு இடம் கொடுத்து
சந்தித்த அவலம் மறந்தீரோ ?

அரசியலாரின் விருப்பமென்னவோ !
வரலாற்றில் பெயர் வீற்றிருந்தால் ? போதுமென்றால் ...

மக்கள் நலன் மண்ணிற்கு
இரையாகமல் மீளுமோ ?

இன்னுமொரு காந்தியில்லையே !
அடியும் மிதியும்பட்டு அகிம்சையோடு
சுதந்திரம் வாங்க ...

இன்னுமொரு சுபாசுமில்லையே !
சுதந்திரப் படைதிரட்ட ...

இன்னுமொரு நேருமில்லையே !
தலைமையேற்று வழிநடத்த ...

இன்னுமொரு அண்ணலில்லையே !
அரசியல் சட்டம் இயற்ற ...

இன்னும் பிற தியாகிகளில்லையே !
தீக்கிரையாகிட ...
செக்கிழுத்திட ...
தூக்கை முத்தமிட ...
கம்பிக் கதவறையில் கரைந்து போக ...

அய்யோ ! அவலம் அறிவாய் அறியாமையை

இளைய சமுதாயமே ! அந்நியம் தவிர் !
தேசம் கார் ,
சுதந்திரம் பேண் .





ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சா தீ

மகாகவி பாரதி : “ சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் “

மகாகவியே !
மண்ணியுமென்னை .?

சாதிகள் உண்டடி பாப்பா
குலம்கூறி பங்கிடாதது பாவம்

செய்தி : மத , சாதி வாரியாக ஒதுக்கீடும் அதற்கான செலவும் .

கண் அடி

கல்லெறிய முடியவில்லை
கண்ணெறிந்தேன்...

காய்களாக காய்த்து தொங்கின
விழிகளெங்கும் .

வேலிவிலக விளைந்த
விளைவு

நினைவுத் தீ

நீண்ட நெடிய தேடலுக்குப்பின் ...

நீ வர... காற்றின் தவம் களைகிறது

உடைதிருத்தி என்னருகில் அமர்கிறாய்

பூத்த முகங்களோடு என்னை விழியில் எடுக்கிறாய்

மெளனம் களைகிறாய்...

பேச மறந்த விசயங்களென ...பேசி மகிழ்கிறாய்

தொடர்புகள் துண்டித்த போது தொங்கிய வார்த்தைகள் பேசுகிறாய்

தாமதத்திற்கு வருந்தி முகம் பார்க்கச் சொல்கிறாய்

கொடிபிடித்து விளையாடுகிறாய்

நம்மை தாண்டிச்செல்லும் வண்ணத்துபூச்சி கேட்கிறாய்

தம்பியிடம் பறித்த கடலைமிட்டாய் தருகிறாய்

இப்படியே ! சேர்ந்தே இருக்க வரம் கேட்கிறாய்

மணல்கூட்டி இருபெயரெழுதி அழிக்க முயல்கிறாய்

தடுத்து நிறுத்த கைகள் நீள்கின்றன ... காணமல் போகிறாய் நீ !?

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இணைத்துணை

என்னில் சில காலம்
சிறகு விரித்தாய்...

இன்றோ !
இருந்து சென்ற
இடம் மட்டும் பசுமையாய் .

அறிகிறேன் ...
வசந்தகாலம் வந்துபோனதை

இன்று...
இலையுதிர்க்காலமாய் _ உன்
நினைவுகள் .

காதல் புதிது

வழி மீது
விழி விரதமிருக்கத் தேவையில்லை

அக்கம்பக்க கண்கள் கண்டு
அச்சப்படத் தேவையில்லை

செவிழியோ ! புறாவோ !
செய்திதர வேண்டியதில்லை

ஈமெயிலனுப்பு
இண்டர்நெட் மூலம்

குறுந்தகவல் தருவேன்
செல்போன் மூலம்

புரிந்துணர
டேட்டிங் போவோம்

புரிந்துகொண்டால் !?
மேரேசு செய்வோம்

இரண்டு மட்டும் பெற்றுக்கொள்வோம்
முரண்பாடு முற்றுமெனில் !

விவாகரத்தின் போது
விவாதம் குறையும் .,

எதிர்காலம் கருதி ....

உனக்கு ஒருத்தனும்
எனக்கு ஒருத்தியும்

நம்மைப்போல பிரிந்திருப்பர்
சேர்ந்து வாழ .

சத்யசோதனை

செய்தி : சார்சு புசு ( அமெரிக்க அதிபர் ) வருகைக்காக மகாத்மா காந்தி சமாதி
மோப்பநாய் சோதனை .

”மகாத்மாவே !
இறந்த பிறகும் உன் அகிம்சை
சோதிக்கப்பட்டது சமாதியில் “

இவர்கள் கல்லறையில்.....

ஏழை...

இவன்...
கனவு மெய்ப்பட்டது
எல்லோருக்கும் சமமாக இவனும் .


அன்னை தெரசா

உலக ...
சமாதானத்திற்காக மண்ணோடு
சமாதானம் செய்கிறார் .


கோழை

இன்று கூட
இவன் ... ஒழிந்தே ! இருக்கிறான் .


விலைமாது

சிவப்பு விளக்கை
சிங்காரித்தவள் இருளிலே
தனித்து .

சனி, 4 செப்டம்பர், 2010

எட்ட முடியாத உயரம்

மனம் தாண்டி
இடம் தாண்டி

கடல் தாண்டி
கண்டம் தாண்டி

சிகரம் தாண்டி
வானம் , பிரபஞ்சம் தாண்டி

இன்னுமிருக்காயென ?

முடங்கிவிட்ட முயற்சியை
முடுக்கிவிட்ட இலக்கே !

நினைவுகள் பறக்கிறது
நீளும் கைகள் உன்னிடமே .

சிறை

தாய் தந்தை
தனிக்குடித்தனம்

தமையனோ !
மறு குடித்தனம்

மகனும் மகளும்
பகல்நேர பராமரிப்பில்

வெறும்வீடு
வேலக்காரியிடம்

அலுவலக அயர்வில்
மனைவி

நானோ ! வீடும் வேலையும்
இரவும் பகலுமாய்

விழித்திருப்பேன் ., தூங்கும் குழந்தைக்கும்
மனைவிக்கும் முத்தம் கொடுத்துறங்க

எழும்போது பார்க்கிறேன்
ஈரம் காயாத....
இரு முத்தங்களை கண்ணத்தில்

தனித்தனியாய்
தனிமை .

நகுலன் என்றொரு கவிதை

வலிய தேடலுக்குப்பின் ...

பசுமைப்புல் வளர்ந்த
வீட்டுவெளி

பழமையாய் ஒரு மிதிவண்டி
தோழமையாய் பூனை

தொங்கித்தூங்க
நாடா கட்டில்

இவருக்கென
இவர்கூட இல்லையாம் ?

காலம் தமிழுக்கு தந்த முதிர்ச்சியை
இவரிடமும் வாங்கிப்போனது

தமிழே! நீ
தங்கி வளர்ந்து , விவாதித்து
செழிப்புற்று ,செம்மைப்பட்டு
வெளியேறிய ...
பெரிய மனதுக்காரனின்
சிறிய வாழ்க்கையை வளமாக்கவில்லையே ?

தீந்தமிழே !
இதுபோல் தீர்ந்துபோகாதே .

குறிப்பு:
(நகுலனின் இறப்பால் எழுந்த இறந்துயரல் நாம் காலாண்டிதலுக்காக )

வானம் வசப்படும்

நாங்கள்
ஏழ்மைக்கும் இல்லாமைக்கும்
தகுதியானவர்கள்

உழைப்புக்கும்
களைப்புக்கும் உறவுக்காரர்கள்

பட்டினிக்கும்
நோய்க்கும் சந்தாதாரர்கள்

பதவிமானுக்கும்
பணக்காரருக்கும் கடனாளிகள்

முயற்சிக்கும் நாங்கள்
வெற்றிக்குத் தகுதியானவர்கள்

இவ்வானம்
ஒருநாள் வசப்படும் .